ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும்
2022ம் ஆண்டு பிப்ரவரி
24ம் தேதி போர் மூண்டது.
3 ஆண்டுகளுக்கு மேலாக
நீடிக்கும் இந்த போரில்
இரு தரப்பிலும் சேர்த்து
லட்சக்கணக்கானவர்கள்
இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள்
ஆயுத மற்றும் நிதியுதவியை வழங்கி
வருவதால், வல்லரசான ரஷ்யாவுக்கு
நிகராக உக்ரைன் ராணுவம்
தாக்குதலை நடத்தி வருகிறது.
அந்த வகையில், உக்ரைன்
நேற்று அதிரடி
ட்ரோன் தாக்குதலை
நடத்தியது.
இதில், ரஷ்யாவுக்கு கனவிலும்
எதிர்பாராத மரண அடி கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவிலுள்ள முர்மான்ஸ்க், இர்குட்ஸ்க்,
இவானோவா, ரியாசன் மற்றும் அமுர் Murmansk, Irkutsk, Ivanovo, Ryazan, and Amur ஆகிய ஐந்து விமானப்படை தளங்களை உக்ரைன் ட்ரோன்கள் தாக்கியுள்ளன.
மொத்தம் 117 ட்ரோன்களை ஏவி
40க்கும் மேற்பட்ட
ரஷ்ய விமானங்களை அழித்து விட்டதாக,
உக்ரைன் ராணுவம் அறிவித்திருக்கிறது.
இதை ரஷ்யா முதலில் மறுத்தாலும்
பிறகு அதன் ராணுவ அதிகாரிகள்
உக்ரைன் ட்ரோன் தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளனர்.
ட்ரோன் தாக்குதல் தொடர்பாக,
சேம்பிளுக்கு சில வீடியோக்களை
உக்ரைன் வெளியிட்டுள்ளது.
Tu 95, Tu 22M, A-50 போன்ற
ரஷ்யாவின் நவீன போர் விமானங்களும்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில்
அடக்கம் என தெரியவந்துள்ளது.
இந்த Tu 95, Tu 22M போர் விமானங்கள் மூலம்தான் உக்ரைனின் பல நகரங்கள் மீது
ஏவுகணைகளை வீசி
ரஷ்யா தாக்குதல்களை நடத்தியது.
உக்ரைனின் அடுத்தடுத்த
ட்ரோன் தாக்குதலால்
ரஷ்ய விமானப்படைத் தளங்கள்
பற்றி எரிந்தன.
உக்ரைன் எல்லையில் இருந்து
பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலுள்ள
அமுர், இர்குட்ஸ்க் விமானப்படைத்தளங்கள்
மீது உக்ரைன் ட்ரோன்கள் தாக்குதல்
நடத்தியது உலக நாடுகளையே
ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தாக்குதலை உக்ரைன்
எப்படி நடத்தியது தெரியுமா?
அதுபற்றி
உக்ரைன் ராணுவ அதிகாரி கூறியதாவது:
இந்த அதிரடி ட்ரோன் தாக்குதல்
ஆபரேஷன் ஸ்பைடர் வெப் என்ற
பெயரில் நடத்தப்பட்டுள்ளது.
பர்ஸ்ட் பெர்சன் வியூ first person view” (FPV)
என்பது ட்ரோனின் பெயர்.
இந்த ட்ரோன்களை
கன்டெய்னர் லாரிகளில் ஏற்றி ரஷ்யாவின் எல்லைக்குள்ளேயே
கொண்டு சென்றோம்.
தாக்குதலுக்கு இலக்காக
நிர்ணயிக்கப்பட்ட
ரஷ்ய விமானப்படை தளம் அருகில் உள்ள பகுதியில் கன்டெய்னர் லாரி நிறுத்தப்பட்ட பிறகு, ரிமோட் மூலம் ட்ரோன்களை
ஏவினோம்.
கண்டெய்னர் திறந்ததும்
சீறிப் பாய்ந்து சென்ற ட்ரோன்கள்
இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தன என உக்ரைன் ராணுவ அதிகாரி கூறினார்.
இதை புத்திசாலித்தனமான தாக்குதல் என
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வர்ணித்துள்ளார்.
நீண்ட காலமாக திட்டமிட்டு
மிக துல்லியமாக தாக்குதலை
நடத்தி முடித்திருக்கிறோம்.
இந்த நிகழ்வு வரலாற்றில் இடம்பெறும்
எனவும் ஜெலன்ஸ்கி பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
FPV ட்ரோன்களை ரஷ்யாவுக்கு
எதிரான போரில் பவர்புல் ஆயுதமாக உக்ரைன் பயன்படுத்தி
இந்த போரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ரஷ்யாவின் சக்திவாய்ந்த போர் விமானங்கள் மட்டுமல்ல;
ரஷ்யாவின் பீரங்கிகள்,
ராணுவ வாகனங்கள்,
பதுங்கு குழிகளையும்கூட
FPV ட்ரோன்கள் துல்லியமாக
அழித்துள்ளன.
FPV ட்ரோன்களின் முன்பக்கத்தில்
நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். அந்த கேமரா உடனுக்குடன் படம்பிடித்து
அதை ரிமோட் மூலம் இயக்கும்
ஆபரேட்டர் அணிந்திருக்கும்
கண்ணாடியிலுள்ள திரைக்கு
அனுப்பிக் கொண்டே இருக்கும்.
இதன்மூலம், ட்ரோன் காக்பிட்டில்
உட்கார்ந்திருப்பது போல
உணர்வு ஆபரேட்டருக்கு கிடைக்கும்.
ட்ரோன் பார்ப்பதை
ஆபரேட்டர் பார்ப்பார்.
ட்ரோன் செல்லும் பாதை
தெளிவாக தெரியும்.
குறுகலான இடங்களிலும் கூட ட்ரோன்களை ஆபரேட்டரால்
சிறப்பாக இயக்கி இலக்கை
துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.
இப்படித்தான் ரஷ்ய
விமானப்படைத் தளங்களை தாக்கி
அழித்திருக்கிறது உக்ரைன்.
இந்த தாக்குதல்
பயங்கரவாத தாக்குதலுக்கு நிகரானது
என கடுமையாக சாடியிருக்கிறது
ரஷ்ய ராணுவம்.
அமெரிக்காவைச் சேர்ந்த
சில மீடியாக்கள்
உக்ரைன் ட்ரோன் தாக்குதலை
பேர்ள் ஹார்பர் அட்டாக்,
9/11 நைன் லெவன் அட்டாக்குடன்
ஒப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த FPV ட்ரோன்கள்
முதலில் ட்ரோன்
பந்தயத்துக்காகத்தான் வடிவமைக்கப்பட்டது.
பொழுதுபோக்குக்காக
வடிவமைக்கப்பட்ட FPV ட்ரோன்களில்
வெடிபொருட்களை நிரப்பி,
ரிமோட் மூலம் அழகாக இயக்கி
ரஷ்ய விமானப்படை தளங்களை
துல்லியமாக தாக்கியிருக்கிறது
உக்ரைன் ராணுவம்.
இந்த ட்ரோன்களை உருவாக்க
செலவு குறைவுதான்.
ஆனாலும்கூட இதை வைத்து எதிரிகளின் ராணுவ நிலைகள், வான் பாதுகாப்பு கவச வாகனங்களை அழிக்கவோ அல்லது கடுமையாக சேதப்படுத்தவோ முடியும் என
வாஷிங்டனை தலைமையகமாக கொண்ட அட்லாண்டிக் கவுன்சில் கூறுகிறது.
இதனால், ரஷ்யா
கதிகலங்கி போய் நிற்கிறது.
நேற்று FPV ட்ரோன்களால்
தாக்கப்பட்ட ரஷ்ய பீரங்கிகளில்
மூன்றில் 2 பங்கு பீரங்கிகள்
முற்றிலும் சேதமடைந்துள்ளன என நேட்டோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சீன எல்லையை ஒட்டியுள்ள அமுர்,
மங்கோலியா எல்லையை ஒட்டியுள்ள
இர்குட்ஸ்க் ஆகிய இடங்களில் உள்ள
ரஷ்ய விமானப்படைத் தளங்களை
FPV ட்ரோன்கள் தாக்கியிருப்பதன்மூலம்,
வெகு தூரத்தில் உள்ள
இலக்குகளையும் ட்ரோன்களால்
தாக்க முடியும் என்பதை
உக்ரைன் நிரூபித்துக் காட்டியிருப்பது;
புதிய போர் உத்தியாக இது
பார்க்கப்படுகிறது என, வாஷிங்டன் போஸ்ட்கூறியிருக்கிறது.
இந்த ட்ரோன்களை
யார் தயாரித்து கொடுக்கிறார்கள்
என்பதையும் பார்க்கலாம்.
உக்ரைன் ராணுவமே
FPV ட்ரோன்களை தற்போது
தயாரித்து வருகிறது.
ஆனால், இதற்கு பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் நிதி வழங்குகிறது.
நேட்டோ நாடுகள்
பெருமளவில் உதவி செய்கிறது.
45 லட்சம் FPV ட்ரோன்களை
வாங்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது.
அதற்காக, 2.6 பில்லியன் டாலரை
செலவழிக்க உக்ரைன் முடிவு செய்துள்ளது.
அதாவது இந்திய ரூபாய் மதிப்பில்
22 ஆயிரம் கோடி.
TAF Drones போன்ற
பல உக்ரைன் நிறுவனங்கள்
மாதந்தோறும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ட்ரோன்களை தயாரிக்கின்றன.
வைல்ட் ஹார்னெட்ஸ் Wild Hornets என்ற நிறுவனம் "குயின் ஹார்னெட்" என்ற பெரிய ட்ரோனை தயாரிக்கிறது.
இது மிக அதிக எடை கொண்ட வெடிபொருட்களை சுமந்தபடி நீண்ட தூரம் பறந்து சென்று இலக்குகளை தாக்கும். இதுபோன்ற நிறுவனங்கள்
FPV ட்ரோன்களை
உக்ரைன் ராணுவத்துக்கு தயாரித்து கொடுக்கின்றன.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நன்கொடைகள் மூலமும், திரள் நிதி
மூலமும்நிதி திரட்டப்படுகிறது.
அதிபர் ஜெலன்ஸ்கியின் நேரடி மேற்பார்வையில் கடந்த 18 மாதங்களாக
ட்ரோன் தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டு துல்லியமாக நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் எல்லையில் மிக நீண்ட தூரத்துக்கு சென்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால்,
ரஷ்யாவின் வான்வழி பாதுகாப்பு கவச அமைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியாக இது பார்க்கப்படுகிறது.
ட்ரோன் தாக்குதல் நடந்த
அதே நாளில்
உக்ரைனுக்கு மிக அருகிலுள்ள
ரஷ்ய எல்லை பகுதிகளில்
2 இடங்களில் பாலங்களை உக்ரைன்
குண்டு வீசி தகர்த்திருக்கிறது.
ஒரு மேம்பாலம் இடிந்து
தண்டவாளத்தில் விழுந்தது.
இதனால் அவ்வழியாக வந்த
பயணிகள் ரயில் தடம்புரண்டு
7 பேர் பலியாயினர்.
60 பேர் படுகாயமடைந்தனர்.
இன்னொரு இடத்தில் பாலத்தில்
சரக்கு ரயில் சென்றபோது
உக்ரைன் குண்டுவீச்சில் பாலம் இடிந்தது. ரயிலின் ஓரு பகுதி பாலத்தின் கீழே உள்ள சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக
இன்ஜின் டிரைவர் காயத்துடன் தப்பினார்.
உக்ரைனின் தொடர் தாக்குதலால்
ரஷ்ய ராணுவம் கொதித்துப் போயிருக்கிறது.
வரும் நாட்களில் ரஷ்யாவின்
தாக்குதல் இன்னும் தீவிரமாக இருக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலை
ரஷ்ய விமானப்படை தளங்களுக்கு
அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில்
அப்லோடு செய்துள்ளனர்.
என்ன நடக்கிறது என்றே புரியவில்லை
என சிலர் பேசுவது மக்களின்
மனதில் உள்ள அச்சத்தை
காட்டுவதாக இருந்தது.
அதேநேரத்தில்,
இரண்டாம் உலகப்போரில்
ஜப்பான் நடத்திய
பேர்ள் ஹார்பர் தாக்குதலுக்கு
அமெரிக்கா கொடுத்த பதிலடிபோல
ரஷ்யாவின் பதிலடி இருக்கும் என,
ரஷ்ய ஆதரவு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்த பரபரப்புக்கு மத்தியில்
துருக்கியின் இஸ்தான்புல் நகரில்
ரஷ்யா – உக்ரைன் குழுவினர் இடையே
இன்று அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.