சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக திருச்சியில் தமிழக பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அண்ணாமலை கடும் தாக்கு
இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுகவில் யாருமே படித்துவிட்டு அதிகாரத்திற்கு வரவில்லை. கூட்டுக் களவாணிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து, குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். கர்மவீரர் காமராஜர், எம்ஜிஆர் போன்றோர் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கல்விக் கொள்கையை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா என்று கேள்வி எழுப்பினார்.
சேகர்பாபுவின் பதிலடி
அண்ணாமலைவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, தன்னை குற்றவாளி என கூறும் முன்பு, அதற்கான ஆதாரங்களை காட்டட்டும். ஆதாரம் இல்லாமல் அண்ணாமலை இப்படி பேசக்கூடாது என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.