ரயில்வேயில் காலியாக இருந்த 18,799 Assistant loco pilot பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 6,315 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வு மார்ச்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் பலருக்கும் தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்வர்கள் தேர்வு மையத்தை உள்ளூரிலேயே நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக தேர்வர்களுக்கு தேர்வு மையங்களை மாற்றக்கோரி மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
எடப்பாடி பழனிசாமி
இதேபோல், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ஆம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19 அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 1000 கி.மீ. க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும்.
மேலும், இதுபோன்ற குளறுபடிகள் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும். எனவே, தேர்வர்களின் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டு, தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன் என தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.