சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்றிட வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்து கட்சிகள், இயக்கங்கள், சாதி, மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஜன.27ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலும் மார்ச்.6ஆம் தேதி அந்த தீர்ப்பை உறுதிசெய்தது நீதிமன்றம்.
துரைமுருகன் அறிக்கை
இந்தநிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும், பொது இடங்களிலும் வைத்துள்ள திமுக கொடிக் கம்பங்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட திமுக கொடி கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.