விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில், முதன்முறையாக ஈயம் (lead) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொல்லியல் துறை இயக்குநர் சி. தமிழ்ச்செல்வன் தலைமையில், வெம்பக்கோட்டையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில், ஈயம் பொருளின் கண்டுபிடிப்பு, அப்பகுதியில் வாழ்ந்த நாகரிக மக்கள் ஈயத்தை பயன்படுத்தியதை உறுதி செய்கிறது. ஈயம், பழங்காலத்தில் அலங்காரப் பொருட்கள் மற்றும் தினசரி பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அகழாய்வு, தமிழ்நாட்டின் தொன்மையான நாகரிகங்களை வெளிச்சமிடுவதில் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இதுகுறித்து X தளத்தில் கருத்து தெரிவித்துள்ள, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், 87 சென்டிமீட்டர் ஆழத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது. மேலும், முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளது. தமிழ் மக்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பதக்கங்கள் மற்றும் இதர கலைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதை உறுதிசெய்யும் வகையில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.